Saturday 11 October 2008

முதலியார் குப்பம்- மழை படகு இல்லம்

03.12.07 முதலியார் குப்பம்- மழை படகு இல்லம்

சுற்றுலா என்றாலே நமக்கு ஞாபகம் வருவது ஊட்டியும், கொடைக்கானலுந்தான். மாறிமாறி இங்கே சென்றுவந்து அலுத்துப்போயிருப்பவர்கள், மேலும் புதிதுபுதிதாய் பல சுற்றுலா தலங்களுக்குச் சென்று ரசிக்கவேண்டும் என்று ஏங்குபவர்களுக்கு வரப்பிரசாதமாய் தமிழகஅரசு உருவாக்கியிருக்கும் ஒரு வித்யாசமான சுற்றுலாத் தளம்தான் முதலியார்குப்பம் மழைத்துளி படகு இல்லம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பாக உருவாக்கப்பட்டிருக்கும் மழைத்துளி படகு இல்லம் தரும் அனுபவமோ தெவிட்டாதது. ஒரு முறை வந்துவிட்டால் திரும்பத்திரும்ப, திரும்பத்திரும்ப வரவேண்டும் என்கிற ஆவலை தூண்டிவிட்டு, அடக்கமாட்டாமல் தவிக்கவிடும் சுகானுபவம் நிறைந்தது இந்த வாசஸ்தலம். அதை அனைவரும் அறிந்து, தெரிந்து, வருகைபுரிந்து, ரசித்துப் பயனுறவேண்டுமென்கிற நன்நோக்கோடுதான் குமுதம் டாட் காம் இணையதள தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு கனிவோடு வழங்குகிறது.

பன்னாட்டு சுற்றுலா நகரமாக மாமல்லபுரத்திலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ளது இந்த பரவசமான சுற்றுலாத்தளம். இங்கு துடுப்புப் படகுகள், மிதி படகுகள், விசைப்படகுகள், கயாக் படகுகள், அதிவேக சாகசநீர்விளையாட்டுப் படகுகள், மேற்கூரை அமைப்புடன் கூடிய விசைப்படகுகள், என விதவிதமானவகைகளில் மொத்தம் 33 படகுகள் இருக்கின்றன. பயணிகளின் வருகையில் தெரியும் ஆர்வத்தைப்பார்க்கையில்,இதன் மடங்கு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்பது திண்ணமாகத் தெரிகிறது.வழிநெடுக இருமருங்கிலும் தெரிகிற பச்சைப்பசேலென்று ஓங்கி அடர்ந்து நிற்கும் மரங்களிடம் இதயத்தைப் பறிகொடுத்தபடி 3கிலோமீட்டர் தூரம் சென்றால் இயற்கையாக அமைந்திருக்கும் தீவு போன்ற இயற்கை சூழ்ந்த அந்த இடம் மெல்லமெல்ல கண்ணுக்குத் தோன்றும். படகு வழிப்பயணத்தில் ஒரு 15நிமிடத்தில் அந்த அற்புதமான இடத்திற்குச் சென்றுவிடலாம். கடற்கரையைச் சுற்றிலும் பச்சைப்பசேல் என்று அடர்ந்த மரங்கள், செடிகொடிகள்...

இங்கே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் விரைந்து செல்லும் இந்த இருசக்கர வாகனஅமைப்பிலான இயந்திரப் படகு மணிக்கு 80 கிலோமீட்டர் வரை வேகமாக செல்லக்கூடியது. இதை ஓட்டிச் செல்பவர்கள் பாதுகாப்பு குறித்த பயிற்சியில் சிறப்புத் தேர்வு பெற்றவர்கள்.அதை ஓட்டுவதென்பது ரொம்ப லெகுவான விசயந்தான். வேகம் அதிகரிக்கும் விசையைத் திருகிப் பிடித்துக்கொண்டால் சமர்த்தாய் பாய்ந்து செல்லும். நிறுத்தும் விசைஎல்லாம் இதற்குக் கிடையாது. வேகத்தை கட்டுப்படுத்தும் விசையை விட்டுவிட்டால், பொறையைப் பார்த்துவிட்ட நாய்க்குட்டிபோல, அமைதியாய் நின்றுவிடும்.

யற்கை சூழ்ந்திருக்கும் ரம்மியமான பீச். இங்கேயிருக்கிற மாதிரிகூடாரத்தைப்போல இங்கே பல தார்பாலின் கூடாரம் உருவாக்க இருக்கிறார்கள். அதற்குள் ஓய்வெடுக்கத்தேவையான வசதிகளும் செய்து தரப்படஇருக்கிறது. பகல் வேளையில் இங்குவந்து இந்த கடற்கரையை ரசிக்கும்போது, இடைஇடையே ஓய்வெடுப்பதற்காகத்தான் இந்த தார்பாலின் கூடாரம். குடும்பத்தோடோ, நண்பர்களோடோ, அலுவலர்களோடோ, ஒரு குழுவாக வரவிரும்பினால் ஒரு நாள் முன்னதாக சென்னை வாலாஜாசாலையில் அமைந்திருக்கும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலகத்திலிருக்கும் சுற்றுலா வளர்ச்சிக்கழக மக்கள்தொடர்பு அதிகாரி ரவி அவர்களிடம் தெரிவித்துவிட்டால், அவர்கள் இங்கே சகல ஏற்பாடுகளையும் செய்துவிடுவார்கள். இங்குவந்திருந்து உல்லாசமாக காலை முதல் மாலைவரை இங்கே கொண்டாடி புத்துணர்வோடு திரும்பிச்செல்லலாம்

இங்கே இயற்கையாக தீவுபோல அமைந்துள்ள மணல்திட்டு ரம்யமானது.

பச்சைப்பசேலென அடர்ந்திருக்கும் சவுக்கு,தென்னை மரங்கள் அணிவகுத்துநின்று, பயணிகளை வாருங்கள் வாருங்களென சதா ஆவலோடு வரவேற்கின்றன.ஒரு மீனின் லாவகத்தோடு படகை படகோட்டி செலுத்த, நீரை கிழித்துக்கொண்டு படகு, கத்திக்கப்பலாய் பாய்ந்து பயணிக்கிறது.

மக்கள் தொடர்பு அதிகாரி ரவி, பாதுகாப்பு முறை குறித்த மாதிரி செயல்விளக்க முறைகள் பற்றித் தெரிவிக்கிறார். படகோட்டிகளே அதில் நீரை ஊற்றி நிரப்புகிறார்கள். நீர் நிரம்பியும்கூட, படகு மூழ்காமல் சென்று கொண்டிருப்பதை செயல்முறை விளக்கமாய் செய்துகாட்டுகிறார்கள். இங்குபலவிதமான படகுகள் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதத்தில் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

டகில் பயணம் செய்யும்போது பாதுகாப்பு ஏற்பாடாக பயணிகளுக்கு பாதுகாப்பு கவசஉடைகள், உயிர் காக்கும் மிதவைகள், மீட்புக்குழுவோடான மீட்புப்படகு என்று இங்கே படகுப்பயணம் நூறு சதவீதம் பாதுகாப்பானதாக அமைத்துத் தரப்பட்டிருக்கிறது. முதலியார்குப்பத்தில் அமைந்துள்ள படகுஇல்லம் தமிழகஅரசால் 1971-ல் துவக்கப்பட்டு, படிப்படியாக நவீனமயமாக்கப்பட்டு இப்போது அனைவரையும் வசீகரிக்கும்வகையில் உருக்கொண்டிருக்கிறது. ஏப்ரல் 2006லிருந்து டிசம்பர் 2006 வரையில் முதலியார்குப்பம் படகுஇல்லம் ஈட்டியிருந்த வருவாயோ 3 லட்சம். ஆனால், 2007 ஏப்ரலிலிருந்து, டிசம்பர் வரை ஈட்டியிருக்கிற வருவாயோ 9.28 லட்சம். ஒரே வருடத்தில் மூன்று மடங்கிற்கும் மேலாக வருமானத்தை அதிகரித்துத்தந்திருக்கிறது. பயணிகளின் உற்சாகத்தைப் பார்க்கையில் இதன் மடங்கு இன்னும் பல பல மடங்கு அதிகரிக்கும் என்பதை இங்கே ஆர்வத்தோடு வரும் பயணிகள் திரும்பமனமில்லாமல் திரும்பும் காட்சியிலிருந்தே உறுதியாகத் தெரிகிறது.

படபடத்தபடி நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாய் பறக்கும் வண்ணவண்ணகொடிகள் படகுத்துறை இங்கேயிருப்பதற்கான அடையாளமாய் கண்கவர்வண்ணத்தில் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

மேலும் பயணிகள் இங்குள்ள பாதுகாப்பு வசதிகள்பற்றிய விழிப்புணர்வு செயல்முறைவிளக்கங்கள் நேரடியாக செய்து காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது இங்கே வழக்கமாக அவ்வப்போது நடத்திக்காட்டப்பட்டுவருகின்ற மிகவும் தேவையான ஒரு விசயந்தான்.இருசக்கர வாகன அமைப்பிலானஇயந்திப்படகில் செல்பவர்கள் தவறி விழுந்துவிட்டால், அவர்கள் உயிர்காக்கும் கவசஉடையின் உதவியால் எப்படி நீரின் மேல் மிதப்பார்கள் என்பதை பயிற்சியாளர்கள் நிகழ்த்திக்காட்டுகிறார்கள். மீட்புக்குழுவுடன் அங்கே சுற்றிச்சுற்றி வந்தவண்ணமிருக்கும் விரைவுப்படகு, தவறி விழுந்தவர்களை விரைந்துவந்து காப்பாற்றும் காட்சியை இப்போது செயல்வடிவமாக்கிக் காட்டுகிறார்கள். கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் உயிர்காக்கும் வளைய மிதவையைத் தூக்கிப்போட்டு, லாவகமாக இழுத்து, அவர்களை எப்படி காப்பாற்றுவார்கள் என்பதை செய்து காட்டுகிறார்கள்.

குடும்பத்தோடு பத்துப்பேர்வரை செல்லக்கூடிய மோட்டார் படகு இங்கே பல உண்டு. இதில் பயணிப்பவர்கள். இதில் பயணிப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் கவிழாத விதத்திலும் இந்த மோட்டார் படகுகள் கட்டமைக்கப் பட்டிருக்கிறதென்பதை பயிற்சியாளர்கள் ஒரு பக்கமாய்சரித்தும், சாயாமல் இருப்பதை செயல்முறை விளக்கத்தோடு செய்து காண்பிக்கிறார்கள். இங்கு வருகிறவர்களிடம் பேராசிரியர் அனந்தசுப்ரமணியம் ஐ.ஐ.டி. கடற்துறை வாகனவடிவமைப்பாளர் இந்த மழைத்துளி படகுஇல்லத்தின் எதிர்காலவளர்ச்சித்திட்டங்கள் பற்றியும், இதனை எப்படி நிர்மாணித்தோம் என்பதுபற்றியும் விவரமாகச் சொல்கிறார்.

இங்கே வரும் பயணிகளின் விருப்பத்தை கருத்தில்கொண்டு, இங்கே வரும் பயணிகளுக்கென கழிப்பிடவசதி, குடிநீர் வசதி, சிற்றுண்டிச்சாலை வசதி, ஊர்திகளை வசதியாக நிறுத்துவதற்கு ஏதுவாக நிறுத்துமிடவசதி, தேனீர் கடை போன்ற பல வசதிகள் இங்கே செய்யப்பட்டிருக்கிறது. மேலும் கடற்கரையிலும் கடற்கரைஉணவுவிடுதி அமைக்கும் திட்டம், மேலே மூடப்பட்டவகையில் அமைக்கப்படும் வாகனநிறுத்தங்கள், கடற்கரையோர மணல்திட்டுகளில் சிமிண்டினால் ஆன இருக்கைகள்,படகுஇல்லத்தைச் சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைப்பது, என பல வசதிகள் செய்யப்படவும் இருக்கிறது.

இத்தனைநேரம் விவரித்த அத்துணை காட்சிகளையும், சென்றுகழிக்க இப்போதே மனது துள்ளாட்டமிடுகிறதா.. வாருங்கள்..வாருங்கள்.. உங்களை நெஞ்சார வரவேற்கக் காத்திருக்கிறது முதலியார்குப்பம் மழைத்துளி படகுஇல்லம்.

No comments: