Saturday 11 October 2008

ரசிக்க, தரிசிக்க திருவனந்தபுரம்

டவுளின் சொந்த நாடு என வர்ணிக்கப்படும் கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம்தான் இந்த வார ஸ்பெஷல் டூரிஸ்ட் ஸ்பாட். காரணம் இது மகாபலிராஜா விசிட் செய்யும் ஓணம் வாரமல்லோ!. ஓ.கே. இனி ஓவர் டூ திருவனந்தபுரம். பத்மநாபசுவாமி (விஷ்ணு) அனந்த சயனத்தில் இங்கு அருள்பாலித்துக் கொண்டிருப்பதால் இந்த ஊர் திருவ(அ)னந்தபுரம் என அழைக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.. திருவனந்தபுரத்தில் தரிசிக்கவும், ரசித்து மகிழவும் நிறைய இடங்கள் உள்ளன.
பத்மநாபசுவாமி கோவில்:

அரபிக்கடலோரம்... அந்த அரபிக்கடலை மேற்குப் பகுதியாகவும், தமிழ்நாட்டை கிழக்குப் பகுதியாகவும் கொண்ட நிலப்பகுதிதான் திருவனந்தபுரம். ஏழு சிறிய குன்றுகளின் மீது எழுந்து நிற்கும் அழகான நகரம். 1750ம் ஆண்டு வாக்கில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக அறிவிக்கப்பட்ட திருவனந்தபுரம் நாட்டின் விடுதலைக்கு பிறகு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகும் கூட தலைநகரமாக தொடருவது சிறப்பாகும்.

இங்குள்ள அருள்மிகு பத்மநாபசுவாமி கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தக் கோவிலை 1733ம் ஆண்டில் திருவாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மா சீரமைத்தார். கேரளாவின் பாரம்பரிய கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் இந்தக் கோவில் விளங்கி வருகிறது. இங்குள்ள சிற்பங்கள், கல்வெட்டுக்கள் போன்றவை நம் முன்னோர்களின் திறமையை இன்றளவும் முரசடித்து வருகின்றன. தரிசிக்க மட்டுமின்றி பார்த்து பரசவப்படவும் வைக்கிறது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்.
ஆற்றுக்கால் பகவதி அம்மன்கோவில்:

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. பல பகுதிகளில் இருந்தும் பெண்கள் அதிகளவில் வந்து பொங்கலிட்டு வழிபடுகிறார்கள். அந்த வகையில் ஆண்டுதோறும் சுமார் 17 லட்சம் பக்தர்கள் இங்கு வந்து செல்வதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
பொன்முடி:

திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள குளுகுளு மலைப்பகுதிதான் பொன்முடி. நம்ம ஊர் ஊட்டி போல இங்கு எப்போதும் ஜிலுஜிலு குளுகுளு காற்றுதான். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 915 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள பொன்முடி மலைப்பகுதியில் அரியவகை மலர்களையும், படபடத்துச் செல்லும் விதவிதமான வண்ணத்துப் பூச்சி ரகங்களையும் கண்டு களிக்கலாம். பச்சைப் பசேல் தேயிலைத்தோட்டங்களை தழுவிச் செல்லும் மேகக்கூட்டங்கள் நம் உடலை மட்டுமல்ல கண்களையும் குளுமையாக்கும். இங்கு சுமார் 3 கி.மீ தொலைவில் மான்பூங்கா ஒன்றும் உள்ளது.

பொன்முடியில் இருந்து சிறிது தொலைவில் அழகான அருவி ஒன்றும் விழுந்து கொண்டிருக்கிறது. இங்கு அகஸ்தியர் கோவில் ஒன்றும் உள்ளது. பவுர்ணமி நாட்களில் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
நெய்யாறு அணை:

அழகு சிந்தும் பிக்னிக் ஸ்பாட்டாக விளங்கும் நெய்யாறு அணை, திருவனந்தபுரத்தில் இருந்து சமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது. இது கேரளாவின் கள்ளிக்காடு புலிகள் சரணாலயப் பகுதி மற்றும் தமிழகத்தின் முண்டன்துறை வனவிலங்கு சரணாலயப் பகுதியின் விரிவாக்கப் பகுதியில் அமைந்துள்ளது. அணையில் படகு சவாரி உண்டு. முதலைப்பண்ணை ஒன்றும் இருக்கிறது.
கோவளம் பீச்:

இந்தியாவின் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான கோவளம் பீச், திருவனந்தபுரத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அசைந்தாடும் தென்னை மரக்கூட்டங்கள், அழகான அரபிக்கடல் ஆகியவற்றை ரசித்துக் கொண்டு கடற்கரையில்... வெண்மணலில் கால்பதித்து நடைபோடுவதே தனிசுகம்தான். இதனாலேயே கோவளத்துக்கு மீண்டும் மீண்டும் வரும் சுற்றுலா பயணிகள் ஏராளம்.
சங்குமுகம் பீச்:

இதே போல திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள சங்குமுகம் பீச்சும் பிரபலம். இதன் அருகிலேயே திருவனந்தபுரம் விமானநிலையமும் அமைந்துள்ளது சிறப்பு. சங்குமுகம் பீச்சுக்கு சூரியன் மறையும் காட்சியை ரசிப்பதற்காகவே ஏராளமானோர் வருகின்றனர்.
வர்க்கலா பீச்:

திருவனந்தபுரத்தில் இருந்து 42 கி.மீ தொலைவில் உள்ளது வர்க்கலா பீச். இங்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையான ஜனார்த்தனசுவாமி கோவிலும் அமைந்துள்ளது.

இவற்றைப்போல கேரளாவின் 2வது பெரிய சிகரமான அகஸ்தியர் கூடம், ஆங்கிலேயர் தங்களது வாணிபத்துக்காக மலபார் பகுதியில் முதல் முறையாக கட்டிய அஞ்சுன்தெங்கு கோட்டை என பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியல் நீளுகிறது.
உணவு, தங்குமிடம், போக்குவரத்து

உணவு வசதியைப் பொறுத்தவரை திருவனந்தபுரத்தில் அனைத்து வகை உணவு வகைகளும் கிடைக்கின்றன. தரமான நல்ல உணவு விடுதிகளும் தங்கும் விடுதிகளும் உள்ளன. போக்குவரத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் திருவனந்தபுரத்துக்கு ரயில் வசதி உள்ளது. சர்வதேச விமான நிலையமும் இங்கு உள்ளது.
"ஓ.கே திருவனந்தபுரத்துக்கு நிங்கள் விசிட் எப்போ?"

No comments: